சமயத்தில் கைகொடுக்கும் ஆபத்தாண்டவன் என்றால், அது "உப்புமா" தான்.

சமைக்க எளிது, சாப்பிட எளிது.அதனால் நிறைய வீடுகளில் இது அடிக்கடி செய்யப்பட்டு அதன் மதிப்பை இழக்கச் செய்துள்ளார்கள் 😊.

குடும்பத்தில் இருந்து வேலை, படிப்பு என்று, பிரிந்திருக்கும் ஆண், பெண் என சகலரும் தங்கள் பசிக்கு , புசிக்க கைகொடுத்த இதை இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.😊

ஆமாம், ஏனிப்படி வெறுக்கிறார்கள்? உப்புமா என்றால் உயிரைக்கூட விடுவேன், உப்புமா வேண்டாம் என்று கூறுபவர்களே அதிகம்.

பெயரைச் சொன்னாலே குழந்தைகள் தெறித்து ஓடும் ஒரு டிபன்..? உப்புமா! ஜவ்வரிசி, பிரெட், கோதுமை ரவை, அரிசி, சேமியா... என விதவிதமாகச் செய்து கொடுத்தாலும்கூட பெரும்பாலான குழந்தைகளுக்கு இது அலர்ஜி. `ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை!’ என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு. விருந்தினர்களின் திடீர் வருகையின்போது கைகொடுத்து உதவுவது, வேலைக்குப் போகும் மகளிருக்கு பல நாள்களுக்கு உற்றதுணையாக இருப்பது, 10 நிமிடங்களுக்குள் செய்துவிடலாம் என்கிற பெருமைக்குரிய சிற்றுண்டி... என பல சிறப்புகளைக்கொண்டது உப்புமா. அப்படி இருக்க, அதன் மேல் ஏன் வெறுப்பு?

Upma

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலம் தொடங்கி, நடிகர் விஜய் படம் வரை `உப்புமா’ எத்தனையோ படங்களில் பேசுபொருள். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்திருக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் யாராலும் அதை மறக்க முடியாது. ஒரு கரும்பலகை. அதில், `உப்புமா மா மா மா மா மா மா மா மா மா மா’ என்று எழுதியிருக்கும். ஒரு நகைச்சுவை நடிகர் அதன் அர்த்தம் புரியாமல் தவித்துக்கொண்டிருப்பார். ஒரு பெண்ணின் தந்தை, தனக்கு வரவிருக்கும் மாப்பிள்ளையின் புத்திசாலித்தனத்தைத் தெரிந்துகொள்ள வைத்திருக்கும் போட்டி அது. என்.எஸ்.கிருஷ்ணன் அவருக்கு உதவுவார். “உப்புமாவுக்கு அப்புறம் எத்தனை `மா’ இருக்கு எண்ணு?’’ என்பார். அந்த நடிகரும் “ஒரு மா, ரெண்டு மா, மூணு மா...’’ என ஆரம்பித்து, “பத்து மா” என்று முடிப்பார். “இப்போ சொல்லு... உப்புமா...’’ என்று என்.எஸ்.கே கேட்க, அந்த நடிகர் “பத்துமா’’ என பதில் சொல்வார். ஆக, `உப்புமா பத்துமா?’ என்பதுதான் பதில். இப்படி உப்புமாவை வைத்து தமிழ்த் திரையுலகம் பல ஜாலங்களைச் செய்திருக்கிறது. `உப்புமா கிண்டி வையடி...’ என ஒரு பாடலே உண்டு. `போக்கிரி’ படத்தில் நடிகர் விஜய், அந்தக் குண்டுப் பையனைக் கட்டிக்கொண்டு, `நாம எல்லாருமே உப்புமா ஃபேமிலிடா’ எனச் சொல்கிற காட்சியை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. `சூரிய வம்சம்’ படத்தில் நடிகை தேவயானி, அப்பா ஜெய்கணேஷுக்கு செய்து கொடுத்து அசத்தும் `இட்லி உப்புமா’ வெகு பிரபலம். ஒன்றுக்கும் ஆகாத திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என்றால் அதற்கு நம் ஆட்கள் வைத்திருக்கும் பெயர் `உப்புமா கம்பெனி’. சினிமாவில் இது கோலோச்சியது இருக்கட்டும்... நிஜத்தில்?!

சட்டென்று செய்துவிடலாம். ஆறிய உப்புமாவைச் சாப்பிடுவது கொஞ்சம் சிரமம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அடிக்கடி இதைச் செய்து போட்டாலும் வெறுப்பு வந்துவிடும். இந்தக் காரணங்களால்தான் பிடிக்காத ஒரு சிற்றுண்டியாக இது கருதப்படுகிறது. ஆனாலும், உப்புமாவைப் பிடிக்காத குழந்தைகள்கூட, வாணலியில் அதன் அடிப்பிடித்த பகுதிக்கு ரசிகர்களாக இருப்பார்கள். உண்மையில், சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிட இது தனிச்சுவை தரும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த எளிய உணவில் எண்ணற்ற பல சத்துக்களும் இருக்கின்றன. அவை, குழந்தைகளுக்கு ஊட்டம் கொடுப்பவை. இது தெரியாமல் பல தாய்மார்கள், அவசரத்துக்கு உப்புமா செய்து கொடுப்பதற்கு பதிலாக, `குழந்தைக்குப் பிடிக்குமே!’ என்று நூடுல்ஸ் பக்கம் ஒதுங்கிவிடுகிறார்கள். நூடுல்ஸில் உப்புமா அளவுக்கு சத்துகள் இல்லை என்பது ஒருபுறம்; அது ஆரோக்கியமானதும் அல்ல.

உப்புமாவின் பூர்வீகம் எது என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கன்னடத்தில் `உப்பிட்டு’, தெலுங்கில் `உப்பிண்டி’, மலையாளத்தில் `உப்புமாவு’, மராத்தியில் `உப்பீட்’, கொங்கணியில் `ருலான்வ்’, இந்தியில் `உப்மா’... ஆக, இந்தியாவெங்கும் நீக்கமற நிறைந்த ஒரு சிற்றுண்டி என்பதில் ஐயமில்லை. ஆனாலும் தென்னிந்தியாவில்தான் அதிகம் பிரபலமாக இருக்கிறது. உப்பில் செய்யப்படுவதால், இது `உப்புமா’வாக ஆகியிருக்கலாம். இதில் நூற்றுக்கணக்கான வகைகள். உப்புமாவின் சுவையைக் கூட்ட என்னென்னவோ செய்து பார்த்துவிட்டார்கள் நம்மவர்கள். ரவை பிடிக்கவில்லையா? அரிசியை ரவைபோல் உடைத்து, இரண்டு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, நிறைய நெய் ஊற்றி மணக்க மணக்க அரிசி உப்புமாவாகத் தந்தார்கள். இன்னும் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்காக, கம்பு, சோளம், தினை, சிவப்பரிசி இதையெல்லாம் ரவையாக்கி அதிலும் செய்து பார்த்துவிட்டார்கள். சாதாரண உப்புமாதான் சில பல மாற்றங்களுக்குப் பிறகு `கிச்சடி’ எனவும் மலர்ந்தது. என்னதான் உப்புமாவை புறக்கணிக்க வேண்டும் என நினைத்தாலும், அவ்வளவு எளிதாக ஓரங்கட்ட முடியாத ஓர் சிற்றுண்டியாக இன்றைக்கும் இது இருக்கிறது.

Semiya

அவலில் செய்த உப்புமாவோ, ஆரோக்கியமானது. முதியவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது என்று சில சித்த மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். 2011-ம் ஆண்டு அமெரிக்கா, நியூயார்க்கில் ஒரு சமையல் போட்டி நடந்தது. அதில் ஃப்ளாய்டு கார்டோஸ் (மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்) கலந்துகொண்டார். தங்கள் வாழ்நாளில் நினைவில் உள்ள ஒரு ரெசிப்பியைச் செய்துகாட்ட வேண்டும் என்பது போட்டி. அந்தப் போட்டியில் கலந்துகொண்ட கார்டோஸ் செய்து காட்டியது, நம்ம ஊர் ரவா உப்புமா. அவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கிடைத்தது. ஒரு மெகா பரிசையே வாங்கித் தந்திருந்தாலும், இந்த அருமையான சிற்றுண்டியை `எனக்கு சின்ன வயசுலருந்தே உப்புமா பிடிக்காது’ என இன்னும் எத்தனை நாள்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

சரி... உப்புமா நம் உடல்நலத்துக்கு நல்லதுதானா? பதில் சொல்கிறார் டயட்டீஷியன் பத்மினி... “அவசரத்துக்குக் கைகொடுக்கும் சிற்றுண்டி உப்புமா. எளிமையான செயல்முறை, எளிதாகச் செய்துவிடலாம்... கொஞ்சம் சத்தான உணவும்கூட. 100 கிராம் உப்புமாவில் 222 கலோரிகள், கொழுப்பு 3.3 கிராம், கார்போஹைட்ரேட் 40.2 கிராம், புரோட்டீன் 7.25 கிராம், சர்க்கரை 1.6 கிராம் ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு, இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவையும் உள்ளன. அரிசி, கோதுமை, சேமியா என விதவிதமான வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் ரவையில்தான் உப்புமா செய்யப்படுகிறது. ரவா உப்புமாவின் சுவை பலருக்கும் ?பிடித்தமான ஒன்று.

கொஞ்சமாக இதைச் சாப்பிட்டாலும் முழு நிறைவு உண்டாகும்; நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்; மெதுவாகத்தான் செரிமானம் ஆகும் என்பதால், அதிகமாக உணவு உட்கொள்ளவேண்டியிருக்காது. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கும், இருக்கும் எடையைப் பராமரிக்க விரும்புகிறவர்களுக்கும் சிறந்தது. இது ஆற்றலைத் தரக்கூடிய சிற்றுண்டி. காலையில் ஒருவர் உப்புமா சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதற்குமான சக்தி இதிலிருந்து கிடைத்துவிடும்; பொதுவாக, மதிய நேரத்துக்குப் பிறகு சிலருக்கு ஏற்படும் சுறுசுறுப்பின்மை, மந்தத் தன்மையையும் போக்கும். இதைத் தயாரிக்கும்போது நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துத் தயாரிப்பது கூடுதல் சக்தியை அளிக்கும்.

உடல் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை செய்யக்கூடியது ரவா உப்புமா. ரவை, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, அது ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கச் செய்யும். ரவை, இதய நலத்துக்கும் உதவக்கூடியது. இதயச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும். ரவையில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த ஓட்டம் சீராக உதவும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். சிலருக்கு ரவையிலிருக்கும் `குளூட்டன்’ (Gluten) என்ற பசைச் சத்து ஒத்துக்கொள்ளாது. அப்படி அலர்ஜி உள்ளவர்கள் ரவா உப்புமாவைத் தவிர்ப்பதே சிறந்தது. மற்றபடி ரவா உப்புமா மிக நல்லது... ஆரோக்யமான காய்கறிகள் சேர்த்த சாம்பாருடன், தரமான சட்னியுடன் சாப்பிடும்போது! அதேபோல கோதுமையை பாலீஷ் செய்து, பல கட்ட மாற்றங்களுக்குப் பிறகுதான் ரவை கிடைக்கும் என்பதால், அடிக்கடி சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இதைச் சாப்பிடும் அளவிலும் கவனம் தேவை. அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் சற்று அதிகமாகவும், குறைந்த உடல் உழைப்பு உள்ளவர்கள் அளவாகவும் சாப்பிட வேண்டும்.


Previous Post Next Post